பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்த பெண் ஆர்வலர் கனடாவில் மர்ம மரணம்

பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த பெண் ஆர்வலர் கரீமா கனடாவில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.

டொரண்டோ, பலுசிஸ்தான் இயற்கை வளங்கள் நிறைந்தது.  இதன் பெரும் பகுதி மக்கள் பாகிஸ்தான் நாட்டிற்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.  பாகிஸ்தானின் தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணம் என்ற பெருமையுடன் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது.

இங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என போராடி வருகின்றனர்.  பாகிஸ்தான் ராணுவம் இங்கு

வசிக்கும் மக்களை கடத்தி, கொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது.  இதனால், ராணுவ அடக்குமுறைக்கு எதிராக பலுசிஸ்தானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் ராணுவ ஊடுருவலை எதிர்க்கும் பலூச் அரசியல் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இதனை தவிர்க்க ஆயிரக்கணக்கான பலூச் அரசியல் ஆர்வலர்கள் தங்கள் நாட்டில் இருந்து தப்பி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.  இவர்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் அடங்குவர்.

இந்நிலையில், பலுசிஸ்தானில் வசித்து வந்த கரீமா பலுச் என்ற பெண் ஆர்வலர், சுவிட்சர்லாந்தில் நடந்த ஐ.நா. கூட்டத்தொடரில் கூட ராணுவ அடக்குமுறை விவகாரம் பற்றி எடுத்து பேசினார்.

கடந்த 2016ம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பெண்கள் பற்றிய பி.பி.சி.யின் பட்டியலில் கரீமா இடம் பிடித்துள்ளார்.  அவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில், பலுசிஸ்தான் வளங்களை பாகிஸ்தான் எடுத்து கொண்டு அந்த மக்களை அழித்து வருகிறது என குற்றச்சாட்டு எழுப்பினார்.

கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து காணவில்லை.  அவர் இருப்பிடம் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி டொரண்டோ போலீசார் கேட்டு கொண்டனர்.

இந்நிலையில், கரீமா கனடாவில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.  அவரது குடும்பத்தினர் கரீமா மரணம் பற்றி உறுதி செய்துள்ளனர்.  திடீரென அவர் உயிரிழந்தது தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என பலுசிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பேசி அங்கிருந்து தப்பி அகதியாக வசிக்கும் நபர் இறப்பது இது முதல் முறையல்ல.  கடந்த மே மாதம் பலுச் பத்திரிகையாளர் சாஜித் உசைன் சுவீடன் நாட்டில் இறந்து கிடந்துள்ளார்.  அவர் கடந்த மார்ச் 2ந்தேதியில் இருந்தே உப்சாலா நகரில் இருந்து காணவில்லை.

தொடர்ந்து பலுசிஸ்தான் ஆர்வலர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது கவலை கொள்ள செய்கிறது என பலுசிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.

dailythanthi