பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகள் குழு ஆலோசனை

சென்னை : கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்திறக்கப்பட்டன. அதேபோல, டிச., 2 முதல், கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச., 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.

புத்தாண்டு

இந்நிலையில், பள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ள னர். தற்போது, டிசம்பர்மாதம் என்பதால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் வருகிறது.அடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், அதன்பின் பள்ளிகளை திறக்கலாம் என, அரசு தரப்பிற்குஅதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழக பள்ளிகல்வி முதன்மைசெயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிச்சாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்படி, 10ம் வகுப்பு,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜன., 4லும், மற்ற அனைத்து வகுப்பு களுக்கும், ஜன., 20ம்தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என, கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முடிவு

இதுதொடர்பாக, சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தி அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதன்பின், தலைமை செயலர், பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் முதல்வரின் ஒப்புதலை பெற்று அறிவிப்பு வெளியிடலாம் என முடிவாகியுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

dinamalar