சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த நபர் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்ட தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் விமானம் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த நவம்பர் 17 முதல் டிசம்பர் 17 வரை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் அண்மையில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்த 31 பேரின் மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனையடுத்து இவர்களில் ஒருவருக்கு இங்கிலாந்தில் உருவான புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு இதே தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர் கடந்த 6 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால், புதிய வகை கொரோனா வைரஸ் சிங்கப்பூர் மக்களிடையே பரவி இருக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரம் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

dailythanthi