கோவிட் 19 : இன்று 2,232 புதிய நேர்வுகள், சரவாக்கில் பாதிப்புகள் அதிகரிப்பு

நாட்டில் இன்று, 2,232 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று, சரவாக் 153 புதியப் பாதிப்புகளுடன், முதல் முறையாக மூன்று இலக்கத்தைப் பதிவு செய்துள்ளது.

சரவாக்கில் பெரும்பாலான நேர்வுகள் மிரியில் பதிவாகியுள்ளன (93).

இந்தப் புதன்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு, மிரி, கூச்சிங் மற்றும் சிபு ஆகிய இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. அமல்படுத்தப்படும்.

தொடர்ந்து நான்காவது நாளாக, நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

557 நேர்வுகளுடன் சிலாங்கூர் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜொகூரில் 396 நேர்வுகளும், சபாவில் 374 நேர்வுகளும் கோலாலம்பூரில் 204 நேர்வுகளும் பதிவாகியுள்ளன.

மற்ற மாநிலங்களில் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :- பினாங்கு (112), நெகிரி செம்பிலான் (102), பேராக் (51), பஹாங் (46), திரெங்கானு (41), கெடா (40), மலாக்கா (37), புத்ராஜெயா (13), லாபுவான் (8), பெர்லிஸ் (3).

இன்று 1,006 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 87 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, சுங்கை பூலோ மருத்துவமனையில் மூவரும், சண்டகான் மருத்துவமனையில் ஒருவரும் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இவர்கள் 47 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள். ஆக, இதுவரை நாட்டில் 555 பேர் இந்நோயின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.