`இரவுச் சந்தை திறக்கப்படாவிட்டால், பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்’

மலேசிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் சங்கத்தின் (இக்லாஸ்) தலைவர் மொஹமட் ரிட்ஜுவான் அப்துல்லா, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) காலம் முழுவதும், இரவுச் சந்தை வர்த்தகர்களைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பி.கே.பி. இரண்டு வார காலத்திற்கு மேல் நீடிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அதிக வருமானம் ஈட்டாத இரவு சந்தை வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்காவிட்டால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

இப்போதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், அவரும் இரவு சந்தை வர்த்தகர்களும் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடி தங்கள் கோரிக்கைகளுக்குக் குரல் கொடுக்கவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

“இரவுச் சந்தை வர்த்தகர்கள் வியாபாரம் செய்யலாமா இல்லையா என்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்காக நாங்கள் காத்திருப்போம்.

“பி.கே.பி. மார்ச் வரை நீட்டிக்கப்பட்டு, நாங்கள் வியாபாரம் செய்ய முடியாவிட்டால், நிச்சயம் நாங்கள் பிரதமர் அலுவலகத்தின் முன் கூடுவோம்.

“ஏனென்றால், தேர்தலின் போது அவர்கள் எங்கள் வாக்குகளைக் கேட்டார்கள், நாங்கள் கொடுத்துள்ளோம். எனவே, இன்று நாங்கள் அரசாங்கத்திடம் உதவ வேண்டுமெனக் கேட்க விரும்புகிறோம்,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரவுச் சந்தை வர்த்தகர்கள் பி.கே.பி.யின் போது வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படாவிட்டால், வருமானத்தை இழக்கும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு ரிட்ஸுவான் பரிந்துரைத்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிலாங்கூர் சிறு வணிகர்கள் சங்கத்தின் தலைவர் நோஷர் சே நோர், இரவுச் சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் செந்தர இயங்குதல் நடைமுறைக்கு இணங்க நடப்பதால், கோவிட் -19 நோய்த்தொற்றால் இரவு சந்தைத் திரளைகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார்.

மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், பி.கே.பி. 2.0-இன் போது, இரவுச் சந்தைகள் அனுமதிக்கப்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.