அவசர பயன்பாட்டிற்காக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்

கொரோனா தடுப்பூசி

பாகிஸ்தான் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர கால பயன்பாட்டிற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கொரோனாவை கட்டுப்படுத்தும் அவசர கால பயன்பாட்டிற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. அந்த நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் பைசல் சுல்தான் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு குழுவுக்கு தலைமை தாங்கும் திட்டத்துறை அமைச்சர் ஆசாத் உமர், ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமையுடன் போடப்படும். பாகிஸ்தானில் 70 சதவீதம் அதாவது 7 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், சர்வதேச கோவேக்ஸ் கூட்டணியின் மூலம் பாகிஸ்தானுக்கு 5 கோடி டோஸ் தடுப்பூசி இலவசமாக கிடைக்கப்பெறும்” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 5 லட்சத்து 19 ஆயிரத்து 291 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 10 ஆயிரத்து 951 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

malaimalar