சீன தயாரிப்பான ‘சினோபார்ம்’ தடுப்பூசி போட்டுக்கொண்ட கம்போடிய பிரதமர்

கம்போடிய பிரதமர் சீன தயாரிப்பான ‘சினோபார்ம்’ தடுப்பூசியை போட்டுக்கொண்டு அதன் மீதுள்ள நம்பக தன்மையை மக்களுக்கு உறுதிப்படுத்தினார்.

பாங்காக், கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடுப்பூசிகளில் சினோபார்ம் தடுப்பூசியும் ஒன்று. இந்த தடுப்பூசியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் லட்சக்கணக்கானோர் போட்டுள்ளனர். இதில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முக்கியமானவர் ஆவார்.

இந்த வரிசையில் கம்போடிய பிரதமர் ஹுன்சென்னும் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். நாட்டிலேயே முதல் நபராக இந்த தடுப்பூசியை அவர் போட்டுள்ளார். இதை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நான் முதல் நபராக தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இந்த விவகாரத்தில் நான்தான் முதலில் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் அதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்’ என்று கூறியிருந்தார்.

கம்போடியாவுக்கு நன்கொடையாக சீனா வழங்கியிருக்கும் 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை ஏற்பதாக கூறியுள்ள ஹுன்சென், நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த 10 லட்சம் டோஸ்கள் போதாது என்றும், நாட்டில் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

dailythanthi