இருநாட்டு மக்கள் நலனுக்காக உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம் பைடன் உறுதி

வெள்ளை மாளிகை

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. எனினும், நாட்டில் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜோ பைடன், பிரதமர் மோடியிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் பைடன் பேசியுள்ளார்.

கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற அமெரிக்கா மற்றும் இந்தியா ஒன்றிணைந்து நெருங்கி பணியாற்றும்.

இரு நாடுகளும் பருவநிலை மாற்றம் பற்றிய தங்களது நட்புறவை புதுப்பித்துக் கொள்ளும். இரு நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் என பிரதமர் மோடியிடம் கூறியுள்ளார்.

மேலும், சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து நிற்கும். பல்வேறு சர்வதேச அளவிலான சவால்களுக்கு எதிராக இரு நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு, நாட்டு மக்களும், இரு நாடுகளும் பயன் அடையும் வழிகளில் கவனம் செலுத்துமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

malaimalar