எனது தமிழக பயணம் மறக்க முடியாதது – பிரதமர் மோடி டுவீட்

எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார்.

புதுடெல்லி, தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்தார்.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலானதிட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி, ‘வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு” என்று தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சின்போது விவசாயம் மற்றும் விவசாயிகளின் சிறப்பை பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர், அவ்வையார் பாடலான, ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என தனக்கே உரிய அழகான தமிழில் நரேந்திர மோடி பேசினார்.

அவர் அவ்வாறு பேசும்போது விழாவில் பங்கேற்றிருந்த அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேபோல புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது நம் கடமை என பேசிய நேரத்தில், பாரதியாரின், “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம், நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம், ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்” என்ற வீர வரிகளை பிரதமர் குறிப்பிட்டு பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்றும்,  நேற்று நடைபெற்ற சிறப்பு அம்சங்களை இதோ பாருங்கள் என வீடியோவை பதிவிட்டுள்ளார்.

dailythanthi