அமானாவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், பி.கே.ஆரில் இணைந்தனர்

ஜொகூர் அமானாவைச் சேர்ந்த மூன்று மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.ஆரில் இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்காராங் சட்டமன்ற உறுப்பினர் கைருட்டின் ஏ இரஹீம்; செரோம் சட்டமன்ற உறுப்பினர் ஃபைசுல் அம்ரி அட்னான்; மற்றும் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர், முஹம்மது சாயிட் ஜோனிர் ஆகியோர் பி.கே.ஆரில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விஷயத்தை கைருட்டினும் பி.கே.ஆரின் மூன்று ஆதாரங்களும் உறுதிப்படுத்தின.

இது அமானாவிலிருந்து பி.கே.ஆருக்கு மாறிய சமீபத்திய நிகழ்வாகும், கடந்த ஆண்டு, சிலாங்கூரைச் சேர்ந்த இரண்டு அமானா சட்டமன்ற உறுப்பினர்கள் – மேரு மற்றும் சபாக் – பி.கே.ஆரில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, கடந்த ஆண்டு செப்டம்பரில் அனுப்பப்பட்ட அவரது விண்ணப்பம், அதே ஆண்டு அக்டோபரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் கட்சிகளுக்கு இடையிலான உறவைப் பேண அதனை வெளியிடவில்லை என்று கைருட்டின் கூறினார்.

அவர் பி.கே.ஆருக்கு சென்றது இருக்கை காரணமாக அல்ல என்று கூறியப் போதிலும், அடுத்தப் பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட அவருக்கு இடம் வழங்கப்படும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.

“நான் நாடாளுமன்றத்தில் போட்டியிட விரும்புகிறேன்.

“[…] இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இது மக்கள் போராட்டம், நான் மக்களுக்காக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறேன்.

“எனவே இங்கே எனக்கு இடம் இருக்கிறது, பி.கே.ஆரில் நண்பர்கள் உள்ளனர். அதுவே எனது நம்பிக்கை. என்னைப் பொறுத்தவரை, அதனால் நான் பி.கே.ஆருடன் சேர நினைக்கிறேன்,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.

தற்போது ரஷீத் ஹஸ்னோன் வைத்திருக்கும் பத்து பாஹாட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் செங்காராங் உள்ளது. ரஷீத் கடந்த ஆண்டு பெர்சத்துவுடன் சேருவதற்கு முன்பு, கடந்த ஜி.இ.யில் பி.கே.ஆர் டிக்கெட்டில் அந்த இடத்தை வென்றார்.

மலேசியாகினி இன்னும் சையத் மற்றும் ஃபைசுலின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறது.

ஜொகூர் கட்சித் தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்ததால், ஃபைசுல் கடந்த ஆண்டு அமானாவை விட்டு வெளியேறினார். அமானாவுக்கான ஜி.இ.-15 வேட்பாளராக இருப்பதில் ஆர்வம் இல்லை என்றும் அவர் சொன்னார்.

இன்று காலை, பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், நாடாளுமன்றம் விரைவில் கூடலாம் என்ற பட்சத்தில், சில தரப்பினர் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை ஈர்க்க முயற்சிப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.