கேள்வித்தாள் வெளியானதால் அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்து

கேள்வித்தாள் வெளியானதால் வீரர்கள் நியமனத்துக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது.

புதுடெல்லி : அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நேற்று இரவு மேற்கொண்ட நடவடிக்கையில், குறிப்பிட்ட தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து, வீரர்கள் நியமனத்துக்கான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது.

மேலும் இதுதொடர்பாக புனேயில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை தொடர்ந்து பேணும் வகையில் தேர்வை ரத்து செய்ய ராணுவம் முடிவெடுத்தது.

தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான நியமன நடைமுறையில் முறைகேட்டை இந்திய ராணுவம் முற்றிலும் சகித்துக் கொள்ளாது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

maalaimalar