சமூக மேம்பாட்டுக்கு பங்காற்றியவர் உதயசூரியன்

தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உள்ள கா. உதயசூரியன், ஒரு சிறந்த சேவையாளர். அவர் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகப் பல நிலைகளில் ஈடுபட்டுக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயலாற்றி வருவதாக சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சமூக இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கருத்துரைத்தனர்.

இன்று கிள்ளானில் ஒன்று கூடிய இவர்கள், உதயசூரியன் மீது தாங்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையையும் ஆதரவையும் புலப்படுத்தினர்.

முன்னால் நீர், நிலம்  மற்றும் இயற்கைவள அமைச்சருக்குப் பணி நிமித்தம் செயலாற்றிய இரண்டு முன்னாள் அதிகாரிகள்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விசேச பணி அதிகாரியாக இருந்த உதயசூரியன் மற்றும் அரசியல் செயலாளராக இருந்த பஸ்லி பய்சால் பின் முகமாட் ரசாலி ஆகிய இருவரும் தற்போது விசாரணைக்காக அந்த ஆணையத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உதயசூரியனின் சமூக பங்களிப்பை நினைவு கூர்ந்த இவர்கள், மலேசியாவில் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக இருந்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக ஐந்தாண்டுகள் இருந்ததையும், அத்தருணத்தின் செயலாக்கத்தையும் பாராட்டினர்.

தற்போது மிண்லன்ஸ் தமிழ்ப்பள்ளியின் வாரியத்தலைவராக இருக்கும் உதயசூரியன், அங்கு நிறுவப்பட்டுள்ள மாநாட்டு மையம் அமைப்பதற்கு வித்திட்டவர். தற்போது அங்கு ஒரு மாணவர் தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது.

முன்னாள் மலேசியத் தமிழ் அறவாரியத்தின் தலைவராக இருந்த இவர், சைல்டு என்ற அமைப்பின் நிருவாக உறுப்பினராகவும், அதோடு கோத்த கெமுனுங் ஆலய நிருவாகத்திலும் அங்கம் வகிக்கிறார்.

இந்த சந்திப்பில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி வாரிய ஒருங்கிணைப்பு அமைப்பின் இராமச்சந்திரன், சுப்பையா, சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் இலா சேகரன் மற்றும் சிங்காரவேல், மலேசியத் தமிழ் நெறி வாழ்வியல் இயக்கத்தின் இரா பெருமாள், சா அலாம் கவுன்சலரும்-மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.