அன்பிற்கினியாள்

நடிகர்     பிரவீன் ராஜ்

நடிகை    கீர்த்தி பாண்டியன்

இயக்குனர் கோகுல்

இசை     ஜாவித் ரியாஸ்

ஓளிப்பதிவு     மகேஷ் முத்துசாமி

எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிந்து வருகிறார் அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்ஸ் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதே சமயம் ஒரு சிக்கன் ஹப்பில் பார்ட் டைம் வேலை பார்க்கிறார் கீர்த்தி பாண்டியன்.

இதற்கிடையில் பிரவீன் ராஜை தந்தைக்கு தெரியாமல் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் அருண் பாண்டியனுக்கு தெரியவர மன உளைச்சலுக்கு ஆளாகிறார். தந்தையின் வருத்தத்தை உணர்ந்து இரவு நேரம் ஆகியும் கவலைப்பட்டுக் கொண்டு சிக்கன் ஹப்பில் இருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக குளிரூட்டும் அறைக்குள் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் குளிரூட்டும் அறையில் இருந்து கீர்த்தி பாண்டியன் எப்படி வெளியே வந்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருண் பாண்டியன் சொந்த மகள் கீர்த்தி பாண்டியனுக்காக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய அனுபவ நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மகள் மீதான பாசத்தையும், காணாமல் போன பிறகு ஏற்படும் தவிப்பையும் உணர வைக்கிறார். காவல் நிலையத்தில் போலீஸாரை அணுகும் விதத்தில் கைத்தட்டல் வாங்குகிறார்.

தும்பா படத்துக்குப் பிறகு இரண்டாவது படத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் கீர்த்தி பாண்டியனுக்கு கிடைத்து இருக்கிறது. அன்பு கதாபாத்திரத்தை உணர்ந்து முழுமையான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். துறுதுறு நடிப்பாலும், குளிரூட்டும் அறைக்குள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளிலும் அசர வைக்கிறார்.

கீர்த்தி பாண்டியனின் காதலனாக வரும் பிரவீன் ராஜ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஐ.யாக நடித்த ரவீந்திர விஜய், சிக்கன் கடை மேலாளராக நடித்த பூபதி ராஜா, மால் செக்யூரிட்டியாக நடித்த ஜெயராஜ், ஏட்டாக நடித்த அடிநாட் சசி என அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வந்தாலும், நடிப்பில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹெலன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கோகுல். ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ஐந்தாவது படம். ரீமேக் படத்தை இயக்க தனி திறமை வேண்டும். கதையின் தன்மை மாறாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸின் இசையும், பின்னணியும் படத்திற்கு பெரிய பலம். இவரது இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி குளிரூட்டும் அறையை வெவ்வேறு கோணங்களில் காட்டி கவனிக்க வைக்கிறார்.

மொத்தத்தில் ‘அன்பிற்கினியாள்’ பேரன்பு.

maalaimalar