உலகில் பாதுகாப்பான நகரம் ‘துபாய்’- ஆய்வில் தகவல்

துபாய்

துபாய் போலீஸ் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

துபாய் பொருளாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக வங்கி வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள உதவும் நகரங்கள் தொடர்பாக ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

இதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சூழ்நிலையை துபாய் நகரம் கையாண்டு வரும் விதமும் இதற்கு ஒரு காரணமாக திகழ்ந்து வருகிறது. துபாய் நகரம் தனது சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த சிறப்பான பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்றும் முடிவுகள் காரணமாக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும் இங்கு முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துபாய் நகரம் முதலீட்டாளர்களை மட்டுமல்லாமல் பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது. இங்கு இருந்து வரும் சிறப்பான பாதுகாப்பு அவர்கள் தங்களது வாழ்க்கையை துபாயில் அமைத்துக் கொள்ள முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக தனிநபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பாதுகாப்பு உள்ளிட்டவை முக்கியமாக கருதப்படுகிறது.

துபாய் போலீஸ் பொதுமக்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் உள்கட்டமைப்புக்கு இங்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் சிறப்புடன் இருக்கிறது. இத்தகைய பல்வேறு காரணங்கள் துபாய் நகரம் உலகில் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக திகழ காரணமாக இருந்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

malaimalar