சேவியரிடமிருந்து பி.கே.ஆர். RM10 மில்லியனைக் கோரும்

கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கடந்த மாதம் கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, RM10 மில்லியனை அவர் செலுத்த வேண்டும் எனக் கோரி பி.கே.ஆர். கடிதம் அனுப்பவுள்ளது.

இந்தக் கடிதத்தைக் கட்சியின் வழக்கறிஞர் சேவியரிடம் நாளை ஒப்படைப்பார் என்றும், அதனைச் செலுத்த அந்த முன்னாள் பி.கே.ஆர். உதவித் தலைவருக்கு ஏழு நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் பி.கே.ஆர். பொருளாளர் லீ சீயான் சுங் தெரிவித்தார்.

“கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்யும் எவரும், ஒப்புக்கொண்டபடி RM10 மில்லியனைச் செலுத்த வேண்டும்,” என்று செமாம்பு சட்டமன்ற உறுப்பினருமான லீ இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 13-ம் தேதி, சேவியர் உதவித் தலைவர் மற்றும் பி.கே.ஆர். உறுப்பினர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்ததோடு, பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.

  • பெர்னாமா