தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அழகி

மியான்மர் நாட்டு அழகி ஹான் லே

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாங்காக்: மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதை வேளையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற அழகி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டு அழகி ஹான் லே, மியான்மர் ராணுவத்துக்கு எதிராக பேசியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது 2 நிமிடப் பேச்சு சர்வதேச பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020′ அழகி போட்டியில் பேசிய ஹான் லே ‘‘இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மர் மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மருக்கு உதவுங்கள். சர்வதேச உதவி மியான்மருக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்’’ என கூறினார். 22 வயதான உளவியல் மாணவியான ஹான் லே சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு யாங்கூன் நகர வீதிகளில், மியான்மார் ராணுவத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச அரங்கில் மியான்மர் ராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு தாய்லாந்திலேயே தங்கி இருக்க ஹான் லே முடிவு செய்துள்ளார்.

maalaimalar