2019-ல் ஜாவி கற்றல் சிக்கலை மசீச கையாண்டது – டிஏபி குற்றச்சாட்டு

2019-ஆம் ஆண்டில், பக்காத்தான் ஹராப்பான் நாட்டை ஆண்டபோது, ​​மசீச, ஜாவி எழுத்து கற்றலை தாய்மொழி பள்ளிகளில் கையாண்டதாகவும், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாகவும் டிஏபி குற்றஞ்சாட்டி உள்ளது.

டிஏபி தேசிய அமைப்பின் செயலாளர் அந்தோனி லோக், 2019-ஆம் ஆண்டில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்த மசீச பள்ளி வாரியங்களையும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்களையும் திரட்டியதாகக் கூறினார்.

“அந்த நேரத்தில் அது ஏன் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது? எப்படி பெரிய எதிர்ப்பாக அமைந்தது?

“மசீச இந்தப் பிரச்சினையை அவர்களின் முதுகுக்குப் பின்னால் விளையாடியதுதான் காரணம்,” என்று அவர் தேசியப் பேராசிரியர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ஒரு நேர்காணல் அமர்வின் போது கூறினார்.

“அந்த நேரத்தில், அவர்கள் சீனப் பள்ளிகளின் அனைத்து நிர்வாகக் குழுக்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் சங்கங்களை அணிதிரட்டினர், ஒவ்வொரு சீனப் பள்ளியும் பதாகைகள் தயாரித்தன, ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

“ஜாவி மொழி சேர்க்கப்பட்டால், அது சீனப் பள்ளிகளின் தன்மையை மாற்றும் என்று கூறப்பட்டது,” என்று அவர் கூறினார்.

பி.எச். வீழ்ச்சிக்குப் பின்னர், அக்கட்சியும் மத்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறிய பின்னர் மசீச அமைதியாகிவிட்டது என்று லோக் கூறினார்.

பி.எச். அரசு இல்லை, பிரச்சனையும் இல்லை

“இன்று, அவர்கள் அரசாங்கத்தில் இருப்பதால், அப்பிரச்சினை எழவில்லை .., அந்த மூன்று பக்க ஜாவி எழுத்து, இப்போது பாடப்புத்தகத்தில் இல்லாமல் போனதா என்று நான் கேட்க விரும்புகிறேன்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

“இப்போதும் அதி பாடப்புத்தகத்தில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் இன்று அது ஒரு பிரச்சினை அல்ல.

“இது சீன சமூகத்தின் சில தரப்பினருக்கு இனி ஒரு பிரச்சினையாக இருக்காது, மேலும் டோங் ஜியாவ் ஸோங் ஆர்ப்பாட்டங்களுக்கு வெளியே வரவில்லை.

“ஒரு வருடமாக இந்தப் பிரச்சினை பற்றி நான் கேள்விப்படவில்லை. உண்மையில், நாங்கள் (பி.எச்.) அரசாங்கமாக மாறியபோது, ​​இதுதான் முக்கியப் பிரச்சினையாக இருந்தது.

“இந்த பிரச்சினை எங்களுக்கு ஒரு இரட்டை முள் வாளாக மாறிவிட்டது – ஒருபுறம் சிலர் நாங்கள் சீனர்களைப் பாதுகாக்கவில்லை என்று கூறினார்கள், மறுபுறம் அரசாங்கத்தில் டிஏபி இருப்பதால், மூன்று பக்கங்கள் மட்டுமே ஜாவி பாடம் செயல்படுத்தப்படுகிறது பாருங்கள் என்று,” என்ற அவர், மலாய்க்காரர்களைப் பயமுறுத்துவதற்கு யார் இந்தச் சிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்.

இருப்பினும், அந்த சிரம்பான் எம்.பி.யின் கூற்றுப்படி, பி.எச். அரசாங்கமாக இல்லாதபோது இந்தப் பிரச்சினை எழுப்பப்படவில்லை.

“இது போன்ற விஷயத்தை சில தரப்பினர் விளையாடுவதையே இது காட்டுகிறது. இது போன்ற ஒரு பிரச்சினையை அரசியல்வாதிகள் யாரும் விளையாடவில்லை என்றால், அது ஒரு பிரச்சினையாக மாறாது.

“இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான விவாதங்கள், அரசியல் ஆதாயத்திற்காக அரசியல்வாதிகளால் விளையாடப்படுகின்றன. நாம் பகுத்தறிவுடன் வாதிட்டால் -தெளிவாக விளக்குங்கள், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இது போன்ற விஷயங்கள் நம்க்கு ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது,” என்றார் அவர்.

2019-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பி.எச் அரசாங்கம் முந்தைய நிர்வாகத் திட்டங்களைத் தொடர ஒப்புக் கொண்டு, ​​4-ஆம் ஆண்டு மலாய் பாடங்களில் ஜாவி கையெழுத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டது.

இந்த முடிவை மலாய்க்காரர் அல்லாத சிலர் கடுமையாக எதிர்த்தனர், ஏனென்றால் இஸ்லாமியமயமாக்கல் தொடர்பான நடவடிக்கை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்குச் சுமையாக இருக்கும் என்று அவர்கள் நம்பினர்.

அந்த நேரத்தில், கல்வியமைச்சராக இருந்த மஸ்லீ மாலிக் ஆரம்பத்தில் இந்த முடிவுக்கு வர மறுத்துவிட்டார், `காட்` மலாய் பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் பாடங்கள் பாடநூலில் ஆறு பக்கங்கள் மட்டுமே உள்ளன என்றும் அவர் விளக்கினார்.

இறுதியில், பி.எச். அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டதனால், `காட்` என்ற அறிமுகத்திலிருந்து ஜாவி அறிமுகத்திற்கு மாறியது, அதில் மூன்று பக்கங்கள் மட்டுமே இருந்தன.

பெற்றோரின் ஆதரவின் படி, இந்த மூன்று பக்கங்களையும் படிக்க தேர்வு செய்ய தாய்மொழி பள்ளிகளுக்கு சலுகை வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம், கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடின் இந்த விஷயத்தை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறினார்