கிட் சியாங் : இது மகாதீரைப் பற்றியது அல்ல, நாட்டின் உருவாக்கத்தைப் பற்றியது

டாக்டர் மகாதீர் மொஹமட் மற்றும் சில டிஏபி தலைவர்களுக்கு இடையேயான பிளவுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் “தீவிரமானவர்” என்று விவரித்த, இஸ்கண்டார் புத்ரி எம்.பி. லிம் கிட் சியாங், இந்தப் பிரச்சினை மகாதீரைப் பற்றியது அல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியது என்றார்.

டிஏபியில் சில தலைவர்கள் தீவிரமானவர்கள் என்றும், மற்றவர்கள் மிதவாதிகள் என்றும் மகாதீர் கூறியதை அடுத்து, ரோனி லியு மற்றும் பி இராமசாமி போன்ற டிஏபி தலைவர்கள் மகாதீரைக் கண்டித்தனர்.

1981 முதல் 2003 வரை, தான் பிரதமராக இருந்தபோது, லிம் மற்றும் அவரது மகன் குவான் எங் ஆகியோர் “தீவிரமானவர்கள்” என்றும், ஆனால் தற்போது அந்த இரண்டு டிஏபி தலைவர்களும் மிகவும் மிதமானவர்களாக மாறிவிட்டனர் என்றும் மகாதீர் கூறினார்.

டிஏபி கடந்த காலத்தில் மகாதீரை எதிர்த்தது, அது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு கருவியாக இருந்ததால் என்று, லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

சிங்க நடனங்கள், தாய்மொழி பள்ளிகள் மற்றும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் பிரச்சாரங்களுக்கான தடை போன்ற பிரச்சினைகளும் இதில் அடங்கும் என்று அவர் கூறுகிறார்.

 

பிரதமராக 13 ஆண்டுகள் இருந்த பிறகு, தேசிய வளர்ச்சியை ஒருங்கிணைப்பதற்கான கொள்கை பன்முகச் சமுதாயத்திற்கு ஏற்றதல்ல என்பதை, இறுதியாக, 1994-ல் மகாதீர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் என்றார் லிம்.

மகாதிர் 2003-ல், பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னர், தனது கொள்கையை ஒதுக்கி வைப்பதற்கான தனது நிலைப்பாட்டை மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார் என்றும் லிம் குறிப்பிட்டார்.

அந்த ஆண்டுகளில், மலேசியாவின் வளர்ச்சி திசையை மாற்றுவதற்கான வலுவான வாய்ப்பை டிஏபி எதிர்கொண்டதாக லிம் கூறினார்.

நாட்டை வளர்ப்பதற்கான டிஏபியின் கொள்கை, ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்டது, தன்மயமாக்குதலை அல்ல என்று லிம் கூறினார்.

ஒருங்கிணைப்பு மற்றும் தன்மயமாக்குதலை தவிர, மூன்றாவது வழியும் இருந்தது – வெவ்வேறு சமூகங்கள் அருகருகே வாழ்கின்றன, ஆனால் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் தனித்தனியாக இருக்கின்றன என அந்த மூத்த டிஏபி தலைவர் சொன்னார்.

“சில சீனர்கள் முற்றிலும் சீனர்களுடனான சூழலில், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் வாழ்கின்றனர்; அவர்களைப் போலவே மலாய்க்காரர்களும் இந்தியர்களும் முறையே மலாய் அல்லது இந்தியச் சூழலில் வாழ்கின்றனர்.

“இது டிஏபியும் நானும் போராடும் மலேசியா அல்ல,” என்று அவர் கூறினார்.

மகாதீரின் தன்மயமாக்கும் கொள்கையை டிஏபி எதிர்த்தாலும், அது தீவிரமானது என்று முத்திரை குத்தப்பட்டது, ஆனால் இப்போது, ​​டிஏபி சீனர்களை ஓரங்கட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று லிம் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இன ஒருங்கிணைப்புக்கான டிஏபியின் போராட்டம் ஒருபோதும் மாறவில்லை என்று லிம் கூறினார்.

“நான் பார்க்க விரும்பும் மலேசியா, மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடாசானியர்கள், இபானியர்கள் என அனைத்து இனத்தவரும் தங்கள் சொந்த உலகத்திலிருந்து வெளிவந்து, மற்ற சமூகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும்.

“மலேசியாவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வைத்து அடையாளம் காண முடியாது என்பதை அறிய, பாராட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.