முதலாவது அமைச்சரவை கூட்டம்: மந்திரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு

முதலாவது அமைச்சரவை கூட்டம்: மந்திரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு

சென்னை: ‘மாவட்டங்களில், ஊரடங்கு முழுமையாக அமலாவதை, அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நேற்று, முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை, பத்தாவது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அமைச்சர்கள், தலைமை செயலர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.காலை, 11:30க்கு துவங்கிய, அமைச்சரவை கூட்டம், பகல், 12:40 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின், முதல்வர் பிறப்பித்த உத்தரவு:

  • மாநிலத்தில் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் முழு ஊரடங்கை, அரசு அமல்படுத்த உள்ளது. இந்த ஊரடங்கு சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, தொற்றின் பரவலை கட்டுப்படுத்தி, இறப்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எனவே, அமைச்சர்கள் அனைவரும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களில், இந்த ஊரடங்கு முழுமையாக அமலாவதை உறுதி செய்ய வேண்டும்

  • மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், அங்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும். இந்த மருத்துவமனைகளில் உள்ள வசதிகளையும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு, தேவையான தரமான உணவு போன்ற வசதி களை மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்

  • தற்போது, பல நெருக்கடிகளுக்கு இடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆக்சிஜன் முறையாக பயன்படுத்தப் படுவதையும், எந்தவிதமான சூழலிலும், ஆக்சிஜன் வீண் போகக்கூடாது என்பதையும் உறுதி செய்ய வேண்டும்

  • சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களிலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, ‘ரெம்டெசிவிர்’ மருந்து, அரசால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிப்பதுடன், இத்தகைய மருந்துகள், கள்ளச்சந்தையில் விற்பனையாவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டும்

  • தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும், தடுப்பூசி போடப்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி பயன்பாட்டை உயர்த்த, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, முனைப்பாக செயல்பட வேண்டும்

  • மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல் துறை, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், வெற்றி பெற இயலும்.

எனவே, அமைச்சர்கள் அனைவரும், இந்த துறைகளை ஒருங்கிணைத்து, ஆய்வு கூட்டங்களை நடத்தி, அனைவரும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

dinamalar