பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?: கல்வி அமைச்சர் பதில்

சென்னை: கோவிட் பரவல் காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட பிளஸ் 2 தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக கேள்விக்கு மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கல்வியாளர்கள், தேர்வுத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசும்போது பிளஸ் 2 பொதுத் தேர்வைக் கட்டாயம் நடத்தியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கு வினாத்தாள் உள்ளிட்ட அனைத்துவிதமான முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தோம். பெரும்பாலானோரின் கருத்துகளும் தேர்வை நடத்துவதற்கு ஆதரவாக இருந்தாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளை முக்கியமாகப் பார்த்தோம். மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அடுத்து பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, யூனிட் தேர்வுகள் என எந்தத் தேர்வுகளும் நடைபெறாத சூழலில் எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர் கல்வித்துறைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பிரதிநிதி ஆகியோரை வைத்து ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழு அமைக்கப்பட்ட உடன் விரைவாக மதிப்பெண்களை மதிப்பிடும் பணிகள் துவங்கும். இதுகுறித்து முதல்வரும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்குள் தமிழகத்திலும் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி முடிவடையும். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதையும் கவனத்தில் கொண்டு முடிவெடுக்க உள்ளோம். குறிப்பாக மாணவர்களின் முந்தைய செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படும். ஏனெனில் மற்ற எந்தத் தேர்வுகளும் நடக்காத நிலையில், மதிப்பீடு செய்ய வேறு எந்த வாய்ப்பும் இல்லை. மாணவர்களின் 10-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை எடுக்கப் போகிறோமோ, 9-ம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அவற்றில் அவர்கள் வாங்கி அதிகபட்ச மதிப்பெண்களை மட்டும் எடுக்கப் போகிறோமோ என்பது குறித்த ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். விரைவில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar