மீட்பு திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார், சமூகத் துறைகள் செப்டம்பர் மாதம் திறக்கப்படலாம்

கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தபின், மலேசியர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக நான்கு கட்ட மீட்பு திட்டத்தைப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.

ஒவ்வொரு கட்டமும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சமூகத் துறைகள் – பள்ளிகள் உட்பட – மூன்றாம் கட்டத்தில் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் (செப்டம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது).

மலேசியா இப்போது முதல் கட்டத்தில் உள்ளது. மூன்று அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்திற்கு மாற்றம் செய்யப்படும்.

கோவிட் -19 நேர்வுகளின் தினசரி எண்ணிக்கை, நாடு முழுவதும் தீவிரச் சிகிச்சை பிரிவுகளின் (ஐ.சி.யூ.) திறன் மற்றும் தடுப்பூசியின் முழு அளவை (இரண்டு ஊசிகள்) பெறுபவர்களின் எண்ணிக்கை ஆகியவை இதன் அளவுகோல்கள் ஆகும்.

முதல் கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதற்கு, மலேசியா சராசரியாக தினசரி 4,000-க்கும் குறைவான வழக்கைப் பதிவு செய்ய வேண்டும், ஐசியு திறன் மிதமான மட்டத்தில் இருக்க வேண்டும் மற்றும் 10 விழுக்காடு மலேசியர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாம் கட்டத்திற்குள் நுழைய, தினசரி நேர்வுகள் சராசரியாக 2,000-க்கும் குறைவாக இருக்க வேண்டும், ஐ.சி.யூ. திறன் போதுமானதாகவும் மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் தடுப்பூசியின் முழு மருந்தளவைப் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.

நேற்று புத்ராஜெயாவில், ஊடகவியலாளர்களுடனான அச்சந்திப்பின் அடிப்படையில், மாற்றத்திற்கான தடம் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

அம்மூன்று குறிகாட்டிகளையும் முன்கூட்டியே அடைந்தால், ஒவ்வொரு கட்டத்தின் மாற்றமும் விரைவாக நிகழலாம், அல்லது அது நேர்மாறாகவும் அமையலாம்.