சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா வர முயன்ற இந்தியருக்கு சிறை

சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தவர் 26 வயதான இந்தியர் பாலச்சந்திரன் பார்த்திபன்.கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு வெளியாகும் வரை ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருக்கும்படி மருத்துவ ஊழியர்கள் அவரிடம் கூறினர். ஆனால் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிய பாலச்சந்திரன் பார்த்திபன் இந்தியா திரும்புவதற்காக ஷாங்காய் விமான நிலையத்துக்கு சென்றார். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு எந்த விமானத்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனிடையே பாலச்சந்திரன் பார்த்திபனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதுபற்றி தகவல் அறிந்த ஷாங்காய் விமான நிலைய போலீசார் பாலச்சந்திரன் பார்த்திபனை பிடித்து சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டார். ஆனாலும் அடுத்த 14 நாட்களுக்குள் அவரை தனிமையில் இருக்க சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பாலச்சந்திரன் பார்த்திபன் மீண்டும் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி இந்தியா வருவதற்காக ஷாங்காய் விமான நிலையம் சென்றார்.

இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. இதில் பாலச்சந்திரன் பார்த்திபன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதிகள் அவருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

dailythanthi