திபிஎம் : இருமருந்தளவு தடுப்பூசி பெற்றவர்களுக்கான எஸ்ஓபி ஈகை பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது

ஈகை பெருநாளுக்குப் பிறகு, இரண்டு மருந்தளவு கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களுக்கான எஸ்.ஓ.பி.க்களை அரசாங்கம் அறிவிக்கும் என்று துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

அக்குழுவினருக்கு அனுமதிக்கப்படும் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதற்காக, தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

“எந்த வணிகத் துறைகளைத் தளர்த்த முடியும் என்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று கோலாலம்பூரில், செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சுகாதாரக் காரணிகளால் தடுப்பூசி போட முடியாதவர்களின் கதி என்ன என்று கேட்டபோது, இந்த விவகாரம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு அனுப்பப்படும் என்றார் ​​இஸ்மாயில் சப்ரி.

இதற்கிடையில், எஸ்.ஓ.பி.-ஐ மீறும் தொழிற்சாலைகளுக்குத் தண்டத்தை அதிகரிக்கும் ஆலோசனை குறித்து கேட்டபோது, இந்த விகிதம் அவசரகால கட்டளைச் சட்டத்தின் திருத்தங்களுக்கு உட்பட்டது என்றார் அவர்.

அவசரகாலக் கட்டளைச் சட்டத்தின் கீழ், அரசாங்கம் முன்பு சட்டம் 342-இன் கீழ், RM1,000 தண்டத்தை RM50,000-ஆக உயர்த்தியது என்றார்.

“ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவசரநிலை முடிவடையும் போது, அது மீண்டும் RM1,000-க்கு திரும்பும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா