சீனாவில் கொட்டித் தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின.

ஹெனான்: உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் பருவங்கள் மொத்தமாக மாறி புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

அண்மையில் மேற்கு ஐரோப்பியாவில் வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இந்தநிலையில் சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கின.

இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.‌ 8 பேர் காணாமல் போய் விட்டனர். வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து 3.76 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழை, வெள்ளத்தில் சிக்கிய மக்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணியில் ராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

maalaimalar