ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஈடில்லா ஈர்ப்பு சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு.மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது.

கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது.இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. கொரோனா அரக்கனின் கொடூர தாண்டவத்தால் முதல் முறையாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்க உள்ளது.

இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள்.

ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது.

ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரபூர்வமாக தொடங்கி விடும்.

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து செல்வார்கள். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 22 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கையில் சற்று மாற்றம் இருக்கலாம். எப்படியும் தொடக்க விழா உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு மேல் தாண்டிவிடும் என்பதால், மறுநாள் துப்பாக்கி சுடுதல், ஆக்கி போன்ற போட்டிகளில் களம் காணும் இந்தியர்கள் சோர்வடையக்கூடும்.

அதனை கருத்தில் கொண்டு அவர்களை தொடக்க விழாவுக்கு செல்ல வேண்டாம் என்ற இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் மைதானமே அதிரும். ஆனால் கொரோனா மிரட்டலால் இந்த தடவை ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஒலிம்பிக் நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.அதே சமயம் 68 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் ஏறக்குறைய ஆயிரம் மிக முக்கிய பிரமுகர்கள் விழாவை கண்டுகளிக்க உள்ளனர்.

இதில் ஜப்பான் மன்னர் நருஹிட்டோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரும் அடங்குவர்.

பரவசமடைந்தாலும், இன்னொரு புறம் கொரோனா பரவலை நினைத்து ஜப்பானியர்கள் பீதியிலேயே உள்ளனர். அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு இருந்த போதிலும் டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் புதிதாக 1,832 பேருக்கு தொற்று பரவியது. கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி ஒலிம்பிக் குழுவிலும் கொரோனா ஊடுருவி விட்டது. ஒலிம்பிக் தொடர்புடைய பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் சில வீரர்கள் என்று 80-க்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிக்கி இருப்பது கவலைக்குரிய விஷயமாகும். வீரர், வீராங்கனைகளுக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டுள்ள ஜப்பான் அரசாங்கம் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் போட்டியை வெற்றிகரமாக நடத்தி பெருமையை நிலைநாட்டுவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறது. எனவே அடுத்த 17 நாட்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, போட்டி ஒருங்கிணைப்பு கமிட்டிக்கும் கடும் சவால் நிறைந்ததாகவே அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக அமெரிக்கா 613 பேரை களம் இறக்குகிறது. அவர்களே இந்த தடவையும் பதக்கவேட்டையில் முதல்வனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இந்திய தரப்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 125 வீரர், வீராங்கனைகள் டோக்கியோவுக்கு படையெடுத்துள்ளனர். அவர்கள் மொத்தம் 18 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஆக்கி, வில்வித்தை ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 2 பதக்கம் மட்டுமே கிடைத்தது. இந்த முறை நிச்சயம் அதை விட கூடுதலாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அடுத்த 17 நாட்களுக்கு இந்த பூமிபந்தின் ஒட்டுமொத்த கண்களும் டோக்கியோ நோக்கியே திரும்பியிருக்கும்.

maalaimalar