கொரோனாவின் கோரம்: 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில், 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கோவிட் பெருந்தொற்றுக்கு தங்களது பெற்றோரை இழந்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 158, ஆந்திராவில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள். ‘இந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்’ என, சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்சகத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளன.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

dinamalar