தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கின

தொடங்கின: வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற,கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டே முடிவடைந்துவிட்டது. இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிப்போனது. இறுதியாக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, முதல்கட்டமாக 27 மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடந்தேறின.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை பணிகள் நடைபெறாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு வரையறை, இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை நிர்ணயம் செய்வது போன்ற பணிகள் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வந்தன.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

(நன்றி Zee Hindustan tamil  )