வேலையிழந்த தொழிலாளருக்கு பி.எப். தொகை அரசு செலுத்தும்: நிர்மலா சீதாராமன்

லக்னோ: ‛‛கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்த பணியாளர்களின் பி.எப். பங்களிப்புத் தொகையை அடுத்த 2022ம் ஆண்டு வரை மத்திய அரசு செலுத்தும்,” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: பி.எப்.,பில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பி.எப். தொகை பங்களிப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும். அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும். அதிகபட்சம் அடுத்த 2022ம் ஆண்டு வரை இது வழங்கப்படும்.

வேலையிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் 16 வகையான தொழில் திட்டங்களின் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கையை 2020ம் ஆண்டு அதிகரித்து அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.60 ஆயிரம் கோடி தொகை கொரோனா காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.