இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை!

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட பரிசோதனை நடக்க உள்ளது. இந்த தடுப்பூசி 920 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் நோவோவேக்ஸ் நிறுவனத்தார் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நோவோவேக்ஸ் என்ற பெயரில் உருவாக்கி உள்ளனர்.

இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோவோவேக்ஸ் என்ற பெயரில் தயாரித்து வழங்குவதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்துடன் நோவோவேக்ஸ் நிறுவனத்தார் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இந்திய சீரம் நிறுவனம்தான், கோவிஷீல்டு தடுப்பூசியையும் தயாரித்து அளித்து வருகிறது.

கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு இந்திய சீரம் நிறுவனத்துக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு தலைமை இயக்குனர் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இந்த தடுப்பூசியை 2 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்க உள்ளனர். இந்த பரிசோதனை நாடு முழுவதும் 12 நகரங்களில் நடக்க உள்ளது. இதற்காக 920 குழந்தைகளை தேர்வு செய்கிறார்கள். 2-11 வயது பிரிவிலும், 12-17 வயது பிரிவிலும் தலா 460 குழந்தைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதற்காக தன்னார்வ குழந்தைகளை தேர்வு செய்வது டெல்லி ஹாம்டர்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார் ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியையும் குழந்தைகளுக்கு செலுத்த முடியும். இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதுவே இந்தியாவில் குழந்தைகளுக்கு பயன்பாட்டுக்கு வருகிற முதல் கொரோனா தடுப்பூசியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி Dailythanthi)