தடுப்பூசியால் தடுக்க முடியாத விரைவாக பரவும் வீரிய வைரஸ் கண்டுபிடிப்பு

புதுடில்லி-

தென் ஆப்ரிக்காவில், தடுப்பூசியால் தடுக்க முடியாத வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின், தேசிய நோய் பரவல் தடுப்பு மையம், குவாசுலு தேசிய மரபணு ஆய்வு மையம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வீரியமிக்க, உருமாறிய சி.1.2., என்ற கொரோனா வைரசை கண்டுபிடித்துள்ளனர்.கடந்த மே மாதம், தென் ஆப்ரிக்காவில் முதன் முதலாக இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூலை மாதத்திற்குள் இந்த வைரசின் மரபணுத் தொடர் 0.2 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, தற்போது உலகளவில் பரவியுள்ள கொரோனா வைரசை விட இரு மடங்கு வேகமாக உருமாறி, அதிக வீரியத்துடன் மனிதர்களைத் தாக்கும் வலிமை உள்ளது.’தற்போதுள்ள எந்த வகை தடுப்பூசிக்கும், சி.1.2., வைரசை தடுக்கும் ஆற்றல் இல்லை’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆக., 13 நிலவரப்படி, சீனா, காங்கோ, மொரீஷியஸ், பிரிட்டன், நியூசிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளது.

இது குறித்து, கோல்கட்டா மத்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் வைரஸ் ஆய்வாளர் உபாசனா ராய் கூறியதாவது:புதிய சி.1.2., கொரோனா வைரஸ், அதி விரைவாக பரவக் கூடியது. இந்த வைரசில் உள்ள புரதப் பொருள் எண்ணற்ற உருமாற்றங்களை அடையும் தன்மை உடையது.அதனால், உடலின் நோய் எதிர்ப்பு திறனை சுலபமாக வென்று, பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் பரவுவதை தடுக்கத் தவறினால், உலகளவில் நடைபெறும் தடுப்பூசி திட்டத்திற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து விடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

(நன்றி  Dinamalar)