சதுர்த்தியை ஒட்டி 3 நாள் விடுமுறை; 8 முதல் ‘ஏசி’ பஸ் இயக்க பரிந்துரை

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், ‘ஏசி’ பஸ்களின் இயக்கத்தை, வரும், 8ம் தேதி முதல் தொடங்க, அரசுக்கு போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர்.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், குளிர்சாதன அல்ட்ரா டீலக்ஸ், குளிர்சாதன கிளாசிக், படுக்கை, இருக்கையுடன் கூடியது என, 350 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பிற கோட்டங் கள் சார்பில், 350 பஸ்கள், 500 ஆம்னி பஸ்கள் என, தமிழகத்தில், 1,200 ‘ஏசி’ பஸ்கள் இயக்கப்பட்டன.கொரோனா பரவலை தடுக்க, மே, 10ல் ஊரடங்கால், அனைத்து பஸ்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டது.

பின் படிப்படியாக விலக்கு அளிக்கப்பட்டு, ஜூலை முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகள் திறப்பால், பஸ்களில் பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது.வரும், 10ல், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், அடுத்த இரு நாள் விடுமுறை நாட்களாக உள்ளது.

அதே நேரம், ஆம்னி பஸ்களின் இயக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சதுர்த்திக்கு சொந்த ஊர் ெசல்லும் பயணியர் வசதிக்காக, 8ம் தேதி முதல், ‘ஏசி’ பஸ்களை இயக்க, அரசுக்கு போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளது. அரசின் முடிவுக்காக, போக்குவரத்து துறை அதிகாரிகள் காத்திருக் கின்றனர்.

  • நமது நிருபர்

(நன்றி Dinamalar)