இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்

புதுடெல்லி,

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

கோவை பெருநகரத்தை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை சராசரியாக 1 லட்சம் பெண்களில் 13.4 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சென்னையை அடுத்து பெண்களுக்கு எதிரான குறைவான குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் 3-வது இடத்தில் கேரளாவின் கொச்சி நகரம் இடம்பெற்றுள்ளது. கொச்சியில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 37.5 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 53.8 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரில் 1 லட்சம் பெண்களில் 67.3 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

பெண்களுக்கு எதிராக அதிக குற்ற சம்பவங்கள் பதிவான பெருநகரங்களில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ முதல் இடத்தில் உள்ளது. லக்னோவில் சராசரியாக ஒருலட்சம் பெண்களில் 190.7 பேருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக என தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவித்துள்ளது.

(நன்றி Dailythanthi)