குவேட் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் குவேட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் – ஹமாட் அல் – சபாவுக்கும் (Sheikh Sabah Al – Hamad Al- Sabah) இடையிலான சந்திப்பொன்று, கடந்த 19 ஆம் திகதி முற்பகல், நியூயோர்க் மேன்ஹெட்ன் இல் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஐம்பது வருடகால நெருங்கிய தொடர்புகள், நட்புறவுடன் கூடிய இராஜதந்திர உறவுகள் பற்றி நினைவூட்டிக் கொண்ட இரு தலைவர்களும், இந்தத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்திக்கொண்டனர்.

இலங்கையர்கள் பலர் குவேட்டில் பணியாற்றுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிற்சிபெற்ற தொழிற்படையினருக்கு, மேலும் பல வாய்ப்புகளைத் திறந்து விடுமாறு கோரிக்கை விடுத்தார்.

கொவிட் தொற்றுப் பரவல் கட்டுப்பாடு மற்றும் நாட்டுக்குள் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஜனாதிபதி, தொற்றுப்பரவல் நீங்கி உலகம் திறக்கப்படும் போது, இரு தரப்புகளுக்கிடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்ள உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில், குவேட் அரசாங்கத்தால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும், குவேட் பிரதமருக்கு ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

(நன்றி JVP NEWS)