பண்டோரா ஆவணங்கள் : ஆர்சிஐ அமைத்து விசாரிக்க வேண்டும்

சிலாங்கூர் இமான் தகவல் பிரிவு, பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்துவது மற்றும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து அரச விசாரணை ஆணையத்தை (ஆர்சிஐ) அமைக்க வலியுறுத்தியது.

உலகளாவிய ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் உட்பட, சுமார் 1500 மலேசியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2004 முதல் 2014 வரையில், 1.8 டிரில்லியன் மலேசிய ரிங்கிட், சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

“நமது தேசத்தில் இருந்து ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, அரசாங்கம் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக வெளிநாடுகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக கடத்தப்பட்டு, இரகசிய வங்கி கணக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அல்லது முதலீடு செய்யப்பட்டிருக்கும் இந்நாட்டு மக்களுக்குச் சொந்தமான வரி பணத்தை, அதிரடியாக மீட்டு எடுக்க வேண்டும்,” என சிலாங்கூர் இமான் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் சையத் அரிஃபின் அபு தாஹிர் கூறினார்.

“குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.

“அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்க பட வேண்டும்.

“அவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கம் தனது தெளிவான, நேர்மையான கொள்கைகள் மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட மலேசியக் குடிமக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அக்கறை கொண்டுள்ளதையும் உறுதி செய்ய முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.