ஊடகச் சுதந்திரம் : 3 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் விவாதிக்கின்றனர்

மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று முன்னணி ஊடக ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களை இயக்கும் போது, சுயாதீனப் பத்திரிகை கொள்கைகளை நிலைநிறுத்துவதில் தங்கள் அனுபவங்களைப் பற்றி விவாதிக்க ஓர் இயங்கலை கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான், தெம்போ மீடியா தலைமை நிர்வாக அதிகாரி ஆரிஃப் சுல்கிஃப்லி மற்றும் ரேப்லர் இணையத் தள இணை நிறுவனர் மரியா ரெஸ்ஸாவுடன், நாளை மாலை 4 மணிக்குத் தொடங்கும் இயங்கலை கருத்தரங்கில் இணையவுள்ளார்.

தி ஃபோர்த் (The Fourth) நிறுவனரும் விருது பெற்ற பத்திரிகையாளருமான இயான் யீ அவர்களால், “துயரத்தில் ஊடகங்கள் : தென்கிழக்கு ஆசியாவில் பத்திரிகை சுதந்திரம் உயிர்வாழுமா?” என்ற தலைப்பில், ஃப்ரீடம் ஃபிலிம் நெட்வொர்க் மலேசியா (Freedom Film Network – FFN), பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தை ஆதரிக்கும் மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸின் மற்ற குழுக்களுடன் இணைந்து இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள், ஊடக உரிமையாளர்கள், நுகர்வோர் மற்றும் சட்டமியற்றுபவர்கள் ஊடகச் சுதந்திரத்தை நிலைநாட்டுவது மற்றும் ஜனநாயகத்தில் சுதந்திரமான பத்திரிக்கையின் பங்கு ஆகியவை விவாதிக்கப்படவுள்ள தலைப்புகளில் அடங்கும்.

மூன்று நாள் விவாதங்களைத் தொடர்ந்து, “தி தௌசன்ஸ் கட்ஸ்” (A Thousand Cuts) – ரெஸ்ஸா மற்றும் ரேப்லர் இணைந்து, 2016 தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதெர்தெவுக்கு எதிராக நடத்தியப் போராட்டங்களின் ஆவணப்படம் சிறப்பு இயங்கலை திரையிடப்படும்.

ஊடகப் பயிற்சியாளர்கள், சுயாதீனத் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் ஊடகச் சுதந்திரப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ளவர்கள், ஆவண திரைபடம் மற்றும் கருத்தரங்கிற்கான டிக்கெட்டுகளை  இங்கே பெறலாம்.

நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிரான டுதெர்தெவின் ‘போர்’ பற்றிய ரேப்லரின் வெளிப்பாடுகள், ரெஸ்ஸா மீது பல கைதுகளையும் குற்றச்சாட்டுகளையும் கொண்டுவந்தன. மேலும், இலக்கு வைத்த தாக்குதல்களும் அவரது ஆசிரியர் குழுவை ஆபத்தில் ஆழ்த்தின.

“பிப்ரவரி 2019-இல் நான் கைது செய்யப்பட்டது, ​​என்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அவர்கள் மிகவும் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்படிதான் இருந்தார்கள்,” என்று ரெஸ்ஸா கூறினார்.

“நாம் இப்போது செயல்படவில்லை என்றால் ஜனநாயகம் என்னவாகும் என்பதை கற்பனை செய்ய இந்தப் படம் நமக்கு உதவும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், அதிகமான இயங்கலை வலைதளங்கள் இப்போது சந்தா மாதிரிகளைப் பயன்படுத்துகின்றன, “சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்களுக்குச் சுயாதீன நிதி தேவை,” என்று கான் கூறினார்.

இந்தோனேசியாவில், சுகார்த்தோ காலத்தில் நான்கு வருடங்கள் தடை செய்யப்பட்ட தெம்போவின் வரலாறு, அச்சு இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களிலிருந்து அந்த ஊடகக் குழுவை இறுதியாக இயங்கலைக்கு நகர்த்தியது.

ஊடகச் சுதந்திரத்தைப் பெறுவது எளிதல்ல என்பதையும் ஆரிஃப் நினைவூட்டினார்.

“இதனை உருவாக்கியது, வளர்த்தது மற்றும் பாதுகாத்தது அனைத்தும் சுயாதீனப் பத்திரிகையாளர்கள், இலாபத்தை மட்டுமே சிந்திக்காத ஊடக உரிமையாளர்கள், விமர்சனம் தேவைப்படும் அரசாங்கங்கள் மற்றும் துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை நம்பியிருக்கும் மக்கள்.

“இந்த நான்கு பேரில் ஒருவர் இல்லாவிட்டாலும், ஊடகச் சுதந்திரம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும்,” என்று அவர் கூறினார்.