தலைவர் பிரபாகரன் முஸ்லிம் தரப்பிடம் கூறியது என்ன?நாடாளுமன்றில் பகிரங்கம்

“நாங்கள் போராடுவது தமிழர்களுக்காக மட்டுமல்ல – தமிழர்களுக்கு கிடைக்கும் சம அந்தஸ்து,உரிமை ஆகியன முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கும், அதில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன்( V Prabhakaran), ரவூப் ஹக்கீமிடம் (Rauf Hakeem) நேரடியாகக் கூறியதாக” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan)தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem), விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கில் இருந்து முஸ்லிம்களை அனுப்பியது தொடர்பில் கூறிய கூற்றுக்கு பதில் கொடுக்கும் முகமாக அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரவூப் ஹக்கீமை நான் மதிப்பவன். ஆனாலும் ஒருசில விடயங்களை அவருக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

யுத்த சூழ்நிலையில் சில முடிவுகளை எடுக்கின்ற போது சாதக பாதகங்கள் வரும் – அது தவிர்க்க முடியாதது எனக் கூறியுள்ளார்.

(நன்றி IBC TAMIL)