‘பத்து பூத்தே மத்திய அரசுக்குச் சொந்தமானது அல்ல, ஜொகூர் சுல்தானையும் ஈடுபடுத்த வேண்டும்’

பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஹசான் அப்துல் கரீம், புலாவ் பத்து பூத்தே அல்லது பெட்ரா பிரான்கா தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முடிவில், ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தரையும் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

ஜொகூர் சுல்தான் பரம்பரைக்கு அத்தீவில் உரிமை உண்டு; முன்பு, சர்வதேச நீதிமன்றத்தில் (ஐசிஜே) உரிமைகோரல் செயல்முறையில் ஜொகூர் சுல்தான் அல்லது மாநில அரசாங்கத்தை ஈடுபடுத்தவில்லை என்றார் அவர்.

பெட்ரா பிரான்கா அல்லது புலாவ் பத்து பூத்தே ஜொகூர் பகுதியில் அல்லது பிரதேசத்தில் உள்ளது, எனவே எந்த விவாதமும் ஜொகூர் சுல்தான் மற்றும் மாநில அரசாங்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், இந்தத் தீவு மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல.

“மத்திய அரசு மாறலாம். பெரிக்காத்தான் நேஷனல், பாரிசான் நேஷனல் அல்லது பக்காத்தான் ஹராப்பான், யார் அரசாங்கமாக இருந்தாலும், விவாதம் ஜொகூர் அரசாங்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

“இது ஜொகூர் மற்றும் மலேசியாவின் நிலப்பரப்பையும் இறையாண்மையையும் உள்ளடக்கியது,” என்று அவர் கூறியதாக, உத்துசான் மலேசியா வலைத்தளம் மேற்கோள் காட்டியுள்ளது.

ஒரு விரிவான ஆய்வை நடத்த, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்து பொருத்தமான விருப்பங்களைப் பரிந்துரை செய்வதற்கு ஒப்புக்கொள்வதற்கான அரசின் நடவடிக்கை குறித்து, அந்தப் பிகேஆர் தலைவர் கருத்து தெரிவித்தார்.

அக்டோபர் 9-ம் தேதி, பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், புலாவ் பத்து பூத்தே வழக்கில் மறுபரிசீலனை மற்றும் விளக்கத்திற்கான விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை அமைக்கவுள்ளதாக அறிவித்தார்.

சர்வதேச சட்ட வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று, விரிவான ஆய்வு மற்றும் பொருத்தமான விருப்பங்களைப் பரிந்துரை செய்வதற்கு முன்னாள் சட்டத்துறை தலைவர் முகமது அபாண்டி அலி தலைமையில் சிறப்பு பணிக்குழு இயங்கும் என்று அவர் கூறினார்.

பதிவுக்காக, 2018-ஆம் ஆண்டு, சர்வதேச நீதிமன்றம், அத்தீவில் உள்ள பிராந்திய சர்ச்சைகள் பிரச்சினையில் சிங்கப்பூர் பக்கம் நிற்க முடிவு செய்தது.

மே 2018-இன் இறுதியில், 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பி.எச். அரசு சர்வதேச நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது.