‘மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்’

மார்ஹேன் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட வறுமை ஒழிப்பு எனும் மார்ஹேன் ஒன்றுகூடல் 2021 நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர்கள், மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நேற்று நடந்த ஒரு விரிவரங்க நிகழ்ச்சியில், கஸானா ஆராய்ச்சி நிறுவனம் (கே.ஆர்.ஐ.) இணை ஆராய்ச்சியாளர் கிரிகோரி ஹோ வை சோன் வறுமை மற்றும் மலிவு விலை வீடுகள் தொடர்பான சவால்களை விவாதித்தார்.

தரமான குறைந்த விலை வீடுகள் இல்லாதது, மலேசியாவில் வீட்டுத் தரங்களின் பலவீனம் மற்றும் பணம் செலுத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வீட்டுக்கடன்களின் காலம் ஆகியவற்றைத் தொட்டு பேசினார்.

கோலாலம்பூர் மக்கள் வீட்டுத்திட்டம் (பிபிஆர்) பற்றிய கேஆர்ஐ -யின் ஆய்வை மேற்கோள் காட்டி, நகரத்தில் பிபிஆர் வீட்டுத் தரம், “ஒருவகையில்” திருப்திகரமாக இல்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டதாக ஹோ கூறினார்.

அனைத்து பிபிஆர் யூனிட்டுகளின் நிலையான அளவு, 650 சதுர அடியாகும், ஒவ்வொரு யூனிட்டிலும் சராசரியாக நான்கு முதல் ஆறு பேர் வரை வசிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

“கேள்வி என்னவென்றால் : இது உண்மையா? வறுமையில் இருக்கும், சுமார் 6 பேர் வசிக்க 650 சதுர அடி வீட்டை வழங்குவது பயனுள்ள ஒன்றுதானா?” என்று அவர் விரிவரங்கத்தின் போது கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் சிங்கப்பூர் எச்டிபி அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்தால், அவர்கள் பல்வேறு வகையான வீட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளனர். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்கள் முதல் வேலையைத் தேடுகிறீர்களானால், இரண்டு அறைகளுடன் கூடிய மலிவு வீடு பொருத்தமானதாக இருக்கலாம்.

“மேலும் ஐந்து வருடங்களில், உங்கள் குடும்பம் பெரிதாகிவிட்டால், நீங்கள் வாழ்வதற்கு ஏற்ற ஒரு பெரிய வீட்டை நீங்கள் தேர்வு செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

இது சம்பந்தமாக, B40 குழுவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொருத்தமான வீட்டுக் கொள்கை திட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ஒரு தனிமனித உரிமையாக சொந்த வீட்டை வைத்திருக்க அவர்கள் தகுதியானவர்கள் என்பதை வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மார்ஹேன் நகர்ப்புறக் குடியேற்றவாசிகள் வலையமைப்பு பிரதிநிதி ஏ பரமேஸ், மலேசியாவில் வீட்டுப் பிரச்சினை ஒரு மனித உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும், ஒரு விற்பனை பொருளாக அல்ல என்று வலியுறுத்தினார்.

விரிவரங்கில், மர்ஹேன் நகர்ப்புறக் குடியேற்றவாசிகள் வலையமைப்பால் (Marhaen Urban Settlers Network) ஆறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

RM100,000-க்குக் கீழ் மலிவு விலை வீடுகள் கட்டுதல், அதிக பிபிஆர் வாடகை வீடுகள் கட்டுதல், கட்டாய வெளியேற்றங்களை நிறுத்துதல், மார்ஹேன் வீடுகள் மீதான ஏலத்தை நிறுத்துதல், B40 / M40 வீடு கட்டுமான நிதியை வழங்குதல் மற்றும் குறைந்த விலை கொண்ட குடியிருப்புகளைப் பராமரிக்க நகராட்சிகளை கேட்டுக்கொள்வது ஆகியவையும் அதில் அடங்கும்.

மார்ஹேன் ஒன்றுகூடல் 2021 கோவிட் -19 நோய்த்தொற்றின் போது, அடிமட்ட குழுவினர் சந்தித்த பிரச்சினைகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தளமாக நிறுவப்பட்டது.