கட்சி தாவிய சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டனர்

மலாக்கா பிஆர்என் | அக்டோபர் தொடக்கத்தில் தேசிய முன்னணி – தேசியக் கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையும் வகையில் கட்சியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் மலாக்கா சட்டமன்றத்திற்குத் திரும்பவில்லை.

இம்முறை சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட நோரிசாம் ஹசான் பாக்தீ, 2018 -இல் 2,756 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற போதிலும் தனது இடத்தைப் பாதுகாக்கத் தவறினார்.

பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகி, தேசியக் கூட்டணி (தேகூ) மற்றும் தேசிய முன்னணியை (தேமு) ஆதரித்த முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினரும் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதற்கிடையில், பிகேஆர் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இட்ரிஸ் ஹரோன் 1,344 வாக்குகள் மட்டுமே பெற்று அசஹானில் பெரும் தோல்வியடைந்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய முகமான ஃபைருல் நிஸாம் ரொஸ்லான் (அம்னோ-தேமு) 4,816 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பந்தாய் குண்டோர் தொகுதியைப் பாதுகாக்க மீண்டும் போட்டியிட்ட மற்றொரு  முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரான நூர் அஸ்மான் ஹாசனும் தோல்வியைத் தழுவினார். அமானா-பிஎச் பிரதிநிதியாகப் போட்டியிட்ட அவர், தேமு வேட்பாளரான துமினா காடி @ முகமது ஹாஷிமிடம் தோற்றார்.

சமீபத்தில், தேமு-தேகூ ஆதரவைத் திரும்பப் பெற்ற மற்றொரு மக்கள் பிரதிநிதி நூர் எஃபாண்டி அஹ்மத், பிஆர்என் -இல் போட்டியிடவில்லை.

2018 -இல், மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியில் தேமு சின்னத்தில் வெற்றி பெற்ற மாஸ் எர்மியாத்தி சம்சுடின், தேகூ -இன் உயர்மட்ட வேட்பாளரையும் நாம் தவறவிடக் கூடாது.

தேகூ -ஆல் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மாஸ் எர்மியாத்தி, கடந்த பொதுத் தேர்தலில் தேமு தோற்ற சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு பெர்சத்துவில் சேர அம்னோவை விட்டு வெளியேறினார்.

நேற்று, தஞ்சோங் பிடாரா தொகுதியில் வெற்றி பெற்ற தேமு வேட்பாளர் அப்துல் ரவூப் யூசோவின் செல்வாக்கின் பலத்தை மாஸ் எர்மியாத்தி ஏற்க வேண்டியதாயிற்று.