ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு

ஜெனிவா: உலகில் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வகை வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெறியிட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

.* ஒமைக்ரான் வகை வைரஸ், ஏற்கனவே கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களில் மீண்டும் எளிதாக தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்பது முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

  • டெல்டா திரிபுடன் ஒப்படுகையில் ஒமைக்ரான், ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டதா? என்பது இன்னும் துல்லியமாகப் புலப்படவில்லை. இப்போதைக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள் மூலம் ஓமைக்ரான் பரவலின் தன்மையைக் கண்காணிக்க முடியும்.

  • தடுப்பூசி எதிர்பாற்றல் கொண்டதா? ஒமைக்ரான் என்பது குறித்து தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • இப்போதைக்கு ஒமைக்ரான் வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு மற்ற திரிபுகளை விட வித்தியாசமானது, மோசமானது என்பதை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை.

  • தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கோவிட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இதை நாம் நேரடியாக ஒமைக்ரானின் வீரியம் என்று கூறிவிட முடியாது. அங்கு சமீப நாட்களில் கோவிட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால் கூட மருத்துவமனையில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.