உலகில் 100 சதவீதம் காகிதமில்லா முதல் அரசு: துபாய் அசத்தல்

துபாய் : “உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது,” என, அதன் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் அறிவித்துள்ளார்

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம், நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.இந்நிலையில் துபாய் அரசு துறைகளில் காகித பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் தற்போது எடுத்துள்ளார்.

இதுகுறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாய் அரசின்கீழ் உள்ள 45 துறைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இனி இந்த துறைகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படாது. இதனால் ஒரு ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வரை அரசுக்கு சேமிப்பாக இருக்கும்; இந்த நடவடிக்கையால் இனி ஊழியர்களின் நேரமும் வீணாகாது.

டிஜிட்டல் மயமாக்கும் துபாய் அரசின் பயணத்தில் இது ஒரு புதிய துவக்கம். துபாயில் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கும் அரசுகளுக்கு இந்த முயற்சி பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நடவடிக்கையால் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் காகிதமில்லா அரசாங்கத்தை கட்டமைக்க, திட்டங்களை வகுத்து வந்தாலும் பல்வேறு காரணங்களால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளது.