கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் கொலை: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்- மத்திய மந்திரி

மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய்

கேரளாவில் அடிக்கடி கட்சி பிரமுகர்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காரணம் இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்கி கொலை செய்தது.

இதற்கு அடுத்த நாளே ஆலப்புழாவில் பாஜக ஓபிசி மோர்ச்சா தலைவர் ரஞ்சித் ஸ்ரீநிவாசனை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து தாக்கி கொலை செய்தனர்.  இந்த இரு சம்பவங்களும் பழிக்குப் பழி வாங்கும் செயலாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:-

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இங்கு 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு சட்டம் ஒழுங்கு இல்லை.

நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இங்குள்ள அரசாங்கம் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்