‘மீண்டும்’ விமர்சனம்

நடிகர்: கதிரவன், சரவணன் சுப்பையா நடிகை: அனகா டைரக்ஷன்: சரவணன் சுப்பையா இசை : மணிமொழியன் ராமதுரை ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாஸ் தேவாம்சம்ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவர்.. கடைசியில் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கதை.

ஒரே ஒரு கதாநாயகன், இரண்டு விதமான கதைகளில் பயணிக்கிறார். கதிரவன், ஒரு போலீஸ் அதிகாரி. எப்போது பார்த்தாலும் வேலையில் ஈடுபாடாக இருக்கிறார். இது, அவர் காதலித்து மணந்த அனகாவுக்கு பிடிக்கவில்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, தாய் வீட்டுக்கு சென்று விடுகிறார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது.

அனகா, தாய் வீட்டிலேயே தங்கி விடுகிறார். அவரிடம் இருந்து குழந்தையை வாங்கி தானே வளர்த்து வருகிறார், கதிரவன். அவருக்கு இன்னொரு பக்கம் ஒரு அபாயகரமான வேலை வருகிறது. அதன்படி, அரசியல் செல்வாக்கு மிகுந்த ஒரு மோசடி மன்னனை அவர் கைது செய்கிறார்.

‘‘என்னை கைது செய்வதன் மூலம் எதுவும் நிற்கப்போவதில்லை. அது தானாகவே நடந்து கொண்டிருக்கும்’’ என்கிறார், அந்த ஆசாமி. அவர் சொன்னது போலவே வெளியுலகில் நாட்டுக்கு எதிரான சதிசெயல்கள் தொடர்கின்றன. சதிகாரர்களை கூண்டோடு ஒழிக்க கதிரவன் தன் மகனை அனகாவிடமும், அவருடைய இரண்டாவது கணவரிடமும் ஒப்படைத்து விட்டு துணிச்சலுடன், பக்கத்து நாட்டுக்கு கள்ளத்தோனியில் செல்கிறார். ‘கிளைமாக்ஸ், ’ எதிர்பாராதது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின், கதிரவன் நடித்த படம், இது. காதல் மனைவியை நினைத்து கலங்கும்போதும், மகனிடம் இருந்து பிரியாவிடை பெற்று பக்கத்து நாட்டுக்கு புறப்படும்போதும் சோகத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார்.

அவர் மகனாக நடிக்கும் சிறுவன், ஒரு ரவுண்டு வருவார். அனகா அந்த சிறுவனுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறார். தாய்ப்பாசத்தை நன்றாகவே முகத்துக்கு கொண்டு வருகிறார். அனகாவின் இரண்டாவது கணவராக வரும் டைரக்டர் சரவண சுப்பையாவுக்கு ‘ஜென்டில் மேன்’ கதாபாத்திரம். அப்படியே மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளருக்கும், இசையமைப்பாளருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். குடும்ப பற்றையும், நாட்டுப்பற்றையும் இணைத்து விறுவிறுப்பாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் சரவண சுப்பையா. பக்கத்து நாட்டுக்கு கதாநாயகன் தனியாக பயணப்படுவதை நம்பமுடியவில்லை.