பாக்., பயங்கரவாத ஆதரவு நாடு; ஐ.நா.,வில் இந்தியா விளாசல்

நியூயார்க் : மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ‘நகர்ப்புற போரும், மக்களின் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் சம்பந்தமின்றி ஐம்மு – காஷ்மீர் பிரச்னை குறித்து, பாக்., துாதர் முனிர் அக்ரம் பேசினார். இந்தியாவுக்கு சொந்தம்இதற்கு பதிலடியாக, ஐ.நா.,விற்கான இந்திய துாதரக குழு ஆலோசகர் ஆர்.மதுசூதன் பேசியதாவது:மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

பயங்கரவாதிகளை ஆதரித்து புகலிடம் தரும் நாடு பாக்., என்பது உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். ஐ.நா., தடை செய்த ஏராளமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.உலகில் எந்த இடத்தில் பயங்கரவாத செயல்கள் நடந்தாலும், அதில் எந்த விதத்திலாவது பாக்., மூலக் காரணமாக உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கட்டுப்பாடின்றி செயல்படும் அதே சமயத்தில் சிறுபான்மையினர் அச்சத்தில் வாழ்கின்றனர்.

இதை மறைப்பதற்காக, ஐ.நா.,வில் அடிக்கடி காஷ்மீர் பிரச்னையை பற்றி பாக்., பேசுகிறது. ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்றும், என்றும் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவிற்கு சொந்தமானது. அங்கிருந்து பாக்., படைகள் வெளியேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சிறையில் அடைப்புகடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை லஷ்கர் பயங்கரவாதிகள் ஆதரவுடன் ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத் – உத் – தவா அமைப்பு நடத்தியது.

பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிந்த ஹபீஸ் சயீதை, உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பயங்கரவாத நிதியுதவி வழக்கில் பாகிஸ்தான் அரசு சிறையில் அடைத்துள்ளது.விவாதம் முழுமை பெறாதுஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, பாகிஸ்தானை மறைமுகமாக தாக்கி பேசியதாவது:இந்தியா பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலில், 166 உயிர்களை பறி கொடுத்தது.

அதனால், சர்வதேச அளவிலான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.சில நாடுகளின் ஆதரவில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளால் உண்டாகும் நாசத்தை கண்டு கொள்ளாமல் இருக்கும் வரை, நகர்ப்புற மக்களின் பாதுகாப்பு குறித்த எந்தவொரு விவாதமும் முழுமை பெறாது.இவ்வாறு அவர் பேசினார்.

dinamalar