கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்- தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக  சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என்றார்.

அது சாதாரண வைரஸ்தான்,  தக்காளிக்கும், இந்த வைரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

சிக்கன் குனியாவால் பாதிக்கப்பட்டு குணமான குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இது பரவ வாய்ப்பு உள்ளது, தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் தக்காளி வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Malaimalar