அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி!

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் வென்ற ஆறுமுகத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி கண்டது. அவதூறாக செய்திகளை வெளியிட்டதின் காரணமாக மலேசிய நண்பனும், அதன் அப்போதைய ஆசிரியர்  மலையாண்டியும், பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியமும் ரிம 5.5 லட்சம் அபராதமாக ஆறுமுகத்திற்குச் செலுத்தவேண்டும் என்று கடந்த 15.9.2020-இல் ஷா அலாம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய நண்பனும், அதன் முன்னாள்  ஆசிரியர் மலையாண்டியும்  மேல்முறையீடு செய்தனர். பூச்சோங் முரளி திவாலாக்கப்பட்டிருந்ததால், அவர் மேல் முறையீடு செய்யவில்லை.

மலேசிய நண்பனின் மேல்முறையீடு கடந்த 11.5.2022-இல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மலேசிய நண்பன் வெளியிட்ட செய்திகள்  அவதூறானவைதான் என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.

நீதிபதிகளாக அமர்வில் இருந்த டத்தோ ஹஸ் ஷனா மேகாட், டத்தோ சீ மீ சுன் மற்றும் டத்தோ இரவீந்திரன் ஆகியோர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வழக்கை விசாரித்தனர்.

மலேசிய நன்பனை பிரதிநிதித்து வழக்கறிஞர் டினேஸ் ஆதிநாரயணனும், ஆறுமுகத்தை பிரதிநிதித்து வழக்கறிஞர் திலகவதி சிவானந்தமும் வாதாடினார்கள்.

ஆனால், உயர்நீதிமன்றம் அனுமதித்த இன்னல்கள் மற்றும்  இடையூற்றுக்கான அபராதம் (AGGRAVATED DAMAGES) ரிம 100,000 இரத்து செய்தது. இது கூட்டரசு நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக அறிவித்தது. நீதிமன்ற செலவினங்களுக்காக மலேசிய நண்பன்  ஆறுமுகத்திற்கு மேலும் ரிம10,000 வழங்க உத்தரவிட்டது.

அதோடு, உயர்நீதிமன்றம் 15.9.2020-இல் தீர்ப்பளித்த அனைத்து நிபந்தனைகளையும் மறு உறுதிப்படுத்தியது. அவை:

*அவதூறு  விளைவித்ததிற்காக, மலேசிய நண்பன் தரப்பினர் ரிம 250,000 யும்,   முரளி சுப்ரமணியம் ரிம 200,000-யும், ஆறுமுகத்திற்கு விளைவித்த அவதூற்றை நிவர்த்தி செய்ய, அபராதமாகச் செலுத்த வேண்டும்.

*தடை உத்தரவு (INJUNCTION) – அதோடு, மலேசிய நண்பனும், முரளி சுப்ரமணியமும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஆறுமுகம் பற்றிய எவ்வகையான அவதூறு செய்திகளையும் வெளியிட  தடையுத்தரவும் விதிக்கப்பட்டது.

*நிபந்தனையற்ற மன்னிப்பு  (UNRESERVED APOLOGY)   இவர்கள் அனைத்து முன்னணி தமிழ் நாளிதழ்களிலும்  ஆறுமுகத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி செய்தி வெளியிடவேண்டும்

*இவர்கள்  நீதிமன்ற செலவுத்தொகையாக ரிம 40,000 -ஐ ஆறுமுகதிற்கு வழங்க வேண்டும்.

*வட்டி (INTEREST) – மேற்கண்ட அனைத்தும் முழுமையாகக் கட்டிமுடிக்கும் வரையில் அதற்கு 5% வட்டியை, வழக்கு தொடரப்பட்ட  தேதியிலிருந்து (2013) வழங்க வேண்டும்.

பின்னணி

இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிவாரணத்திற்காக 2012-இல் மலேசிய அரசாங்கம் ரிம 3.2 மில்லியன் நிதியை மலேசியத் தமிழர் ப்போரம் அமைப்பிடம் (TAMIL FORUM MALAYSIA) வழங்கியது.

இந்த நிதியை அந்த அமைப்பின் நிருவாக குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆறுமுகம் தவறாகக் கையாண்டனர் என்ற வகையில் அவதூறான  செய்திகளைத் தொடர்ச்சியாக மலேசிய நண்பன் நாளிதழ் 2013-இல் வெளியிட்டது. இந்த செய்திகளுக்குக் காரணமாக இருந்தவர் முரளி சுப்ரமணியம் என்பவர்.

2013ஆண்டு மார்ச் மாதம் தொடர்ச்சியாக தம்மை முன்னிலைப்படுத்தி மலேசிய நண்பன் வெளியிட்ட 6 செய்திகள் கருத்துச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும், நியாயமற்ற வகையிலும், தன்னை மக்கள் மத்தியில் அவமானப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் எழுதப்பட்டவை என்று இந்த அவதூறு வழக்கை 2013-இல் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய நண்பன் கூட்டரசு நீதி மன்றத்தில் (Federal Court) இன்னொரு மேல் முறையீடு செய்ய வாய்ப்புண்டு. அதை பரிசீலத்து வருவதாக அவர்களின் வழக்கறிஞர் கோடிகாட்டியதாக அறியப்படுகிறது.