ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருடன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

ஷேக் கலீஃப்பாவின் இறுதிச் சடங்கு கடந்த 14ம் தேதி நடைபெற்றது.  அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில்,ஷேக் கலீஃபா மறைவுக்கு இந்தியாவின்  சார்பாக அஞ்சலி செலுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அபுதாபி சென்றார்.

அபுதாபியில் உள்ள முஷ்ரிப் அரண்மனையில்,  ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர்  ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும்  பிரமுகர்களை சந்தித்த வெங்கையா நாயுடு , ஷேக் கலீஃபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

சிறந்த உலகத் தலைவர் மற்றும் இந்தியாவின் உண்மையான நண்பர் என்று மறைந்த அதிபரின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். அவரது மறைவு ஐக்கிய அரபு அமீரகத்தில்  உள்ள இந்திய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது,  ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு வெங்கைய நாயுடு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புதிய அதிபரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா- ஐக்கிய  அரபு அமீரக உறவு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து புதிய உயரங்களை எட்டும் என்று  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.