தென்னிலங்கையில் தொடரும் நெருக்கடி – அமைச்சரவை அமைப்பதில் சிக்கல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக புதிய அமைச்சரவையை அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்கினாலும், அவர்கள் வருகைத்தராத காரணத்தினால் புதிய அரசாங்கம் அமைப்பது நாளுக்கு நாள் தாமதமாகுவதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட குறித்த முன்னாள் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அரசியல் கட்சிகளாக ஒன்றிணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

இந்நிலையில், புதிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ள அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலந்துரையாடும் உறுப்பினர்கள் அவ்வப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் நேரடியாக ஆட்சி அமைப்பதில் ஈடுபடாத காரணத்தாலேயே அமைச்சரவை பதவிப் பிரமாணம் தாமதமாகியுள்ளது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் அனைத்து நோக்கங்களும் கலந்துரையாடப்பட்டு தயாரிக்கப்பட்ட போதும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அதனை வரிசைப்படுத்த இன்னும் முடியவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்து வருகின்ற நிலையில் புதிய அமைச்சரவை அடுத்து வரும் நாட்களில் பதவிப் பிரமாணம் செய்ய வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Tamilwin