இலங்கையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால் மரணங்கள் அதிகரிக்கக்கூடும்: மருத்துவர்கள்

இலங்­கை­யில் நில­வும் பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள மருந்­துத் தட்­டுப்­பாட்­டால் மர­ணங்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று மருத்­து­வர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர். தேவை­யான மருந்­துப் பொருள்­கள் இல்­லா­த­தால் நோயாளி­க­ளின் அறுவை சிகிச்­சை­களை ஒத்­தி­வைக்­கும் நிலைக்கு மருத்­து­வ­ம­னை­கள் தள்­ளப்­பட்­டுள்­ளன.

இலங்கை 80 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மான மருந்­துப் பொருள்­களை வெளி­நா­டு­களில் இருந்து இறக்கு­மதி செய்­கிறது. எனி­னும், பொரு­ளி­யல் நெருக்­கடி கார­ண­மாக அந்நிய நாணய கையி­ருப்பு குறைந்­துள்­ள­தால், அத்­தி­யா­வ­சிய மருந்­துப் பொருள்­க­ளுக்­குக் கடும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இத­னால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை செயலற்றுப் போகும் நிலை­யில் இருக்­கிறது.

மருந்­துத் தட்­டுப்­பாடு கார­ண­மாக தலை­ந­கர் கொழும்­பிற்கு அருகே உள்ள அபெக்‌ஷா புற்­று­நோய் மருத்­து­வ­ம­னை­யில் மருத்­து­வப் பரி­சோ­த­னை­களும் அறுவை சிகிச்­சை­களும் தள்­ளி­வைக்­கப்­பட்டுள்­ளன. இத­னால் நோயா­ளி­களும் அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கும் மருத்­து­வர்­களும் செய்­வ­த­றி­யாது தவித்து வரு­கின்­ற­னர்.

“புற்­று­நோ­யா­ளி­க­ளுக்கு இது மிக­வும் சோத­னை­யான கட்­டம். அறுவை சிகிச்­சை­களை மேற்­கொள்ள காலை­யில் நாங்­கள் திட்­ட­மி­டு­வோம். ஆனால், மருந்­துப் பொருள்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு நிலவு­வ­தால் திட்­ட­மிட்­ட­படி அறுவை சிகிச்­சை­களை நடத்த முடி­யா­மல் போகிறது,” என்­றார் டாக்­டர் ரோஷன் அம­ர­துங்க.

நில­வ­ரம் விரை­வில் மேம்­ப­டா­விட்­டால், நோயா­ளி­கள் பலர் இறந்து­வி­டக்­கூ­டும் என அவர் எச்­ச­ரித்­தார். மருந்­து­க­ளைத் தரு­விக்­கும் பணி­யில் ஈடு­பட்­டு­வ­ரும் அதி­காரி ஒரு­வர், ஏறக்­கு­றைய 180 மருந்­துப் பொருள்­க­ளுக்­குத் தட்டுப்­பாடு நிலவு­வ­தா­கத் தெரி­வித்­தார். ரத்த சுத்­தி­க­ரிப்பு நோயா­ளி­க­ளுக்­கான ஊசி­கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்­க­ளுக்­கான மருந்­து­கள், குறிப்­பிட்ட சில புற்­று­நோய் மருந்­து­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

இந்­தியா, ஜப்­பான் உள்­ளிட்ட நாடு­களும் தனிப்­பட்ட நன்­கொ­டை­யா­ளர்­களும் மருந்­து­களை வழங்க முன்­வந்­துள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் திரு சமண் ரத்­நா­யக்க எனும் அந்த அதி­காரி கூறி­னார். ஆனால், அவை வந்­து­சேர்­வ­தற்கு நான்கு மாதங்­கள் வரை ஆக­லாம் என்­றார் அவர். மருந்­து­களை வர­வ­ழைக்க உள்­நாட்­டி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் வசிக்­கும் தனி­யார் நன்­கொ­டை­யா­ளர்­களி­டம் இலங்கை உதவி கோரி­ உள்­ளது.

இதற்­கி­டையே, இந்­தியா 25 டன் மருந்­துப் பொருள்­க­ளு­டன் இதர மருத்­துவ உப­க­ர­ணங்­க­ளை­யும் இலங்­கைக்கு நேற்று முன்­தி­னம் அனுப்பி வைத்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

“இந்­தியா வேறெந்த நாட்­டிற்கு இந்த அள­வுக்கு உத­வி­ய­தில்லை. இதற்­காக நாங்­கள் நன்றியை வெளிப்­ப­டுத்­து­கி­றோம்,” என்று இலங்கை வெளி­யு­றவு அமைச்­சர் ஜீ.எல்.பெய்ரிஸ் கூறி­னார்.

 

 

Tamilmurasu