நன்னடத்தை காரணமாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டாக அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர். மீனவர்கள் இந்தியா திரும்புவதற்கான பயண செலவை எதி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர்.

அங்கு அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இதுதொடர்பாக, சிறை கண்காணிப்பாளர் முகமது இர்ஷாத் கூறுகையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டாக அவர்கள் சிறையில் இருந்தார்கள்.

இன்று அவர்கள் எதி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர். எதி அறக்கட்டளை அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் அழைத்துச் செல்லும் என தெரிவித்தார்.

 

Malaimalar